ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: சகோதரருடன் பெண் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சென்னையை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது53). இவர் ஒசூரில் உள்ள ஸ்டேட் பாங்கியில் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சாந்தி (48), மைத்துனர் நாகேந்திரன் ஆகியோருடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை நாகேந்திரன் ஓட்டினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்பத்துபெருமாள் கோவில் விலக்கு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சாந்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ரகுநாதன், நாகேந்திரன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார். ரகுநாதனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.