செய்திகள்

எதற்கெடுத்தாலும் கவர்னரையும், மத்திய அரசையும் குறை சொல்வது சரியல்ல: முன்னாள் எம்.பி. கண்ணன் பேட்டி

Published On 2017-09-12 17:28 GMT   |   Update On 2017-09-12 17:28 GMT
எதற்கெடுத்தாலும் புதுவை அரசு கவர்னரையும், மத்திய அரசையும் குறை சொல்வது சரியல்ல என்று முன்னாள் எம்.பி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

முன்னாள் எம்.பி. கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை அரசு நீட் தேர்வை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? நீட் தேர்வு வராது என்று அரசு அறிவித்தது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை அரசு வேக வேகமாக நடத்தி முடித்தது.

நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி விட்டு மாணவர் சேர்க்கையை ஏன் விரைந்து நடத்தினீர்கள்? இரட்டை வேடம் போடுவதில் நாராயணசாமி சிறப்பானவர். எதற்காகவும் இரட்டை வேடம் போடுவார். அதேபோல்தான் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும், ஆதரிப்பதாகவும் இரட்டை வேடம் போட்டுள்ளார்.

நீட் தேர்வு மூலம் சென்டாக்கில் தேர்வு பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை வரைவோலையாக கொடுங்கள், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை ரொக்கமாக கொடுங்கள் என்று கல்லூரி நிர்வா கங்கள் பகிரங்கமாக மாணவர்களை மிரட்டி பெறுகின்றனர்.

கல்லூரி நிர்வாகங்களிடம் வெகுமதி பெற்றுள்ள இந்த அரசு அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. நெல்லித்தோப்பு இடைத் தேர்தலுக்கே மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் முன் பணம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தான் சமூக நீதியா? இந்த அநியாயத்தை கேட்பது யார்?

கல்வியில் ஊழல், கொள்ளை. எதற்கெடுத்தாலும் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவரை தான் மக்கள் தோற்கடித்து விட்டார்களே.

மேலும், மேலும் அவர் மீது குற்றம் சாட்டுவதால் என்ன பயன்? மாணவர்களை மாநில அரசு பழிவாங்குகிறது. எதை கேட்டாலும் டெல்லி கொடுக்கவில்லை என்று கையை விரிக்கிறார்கள். கவர்னரையும் குறை சொல்கிறார்கள். டெல்லிக்கும், கவர்னருக்குமா புதுவை மக்கள் வாக்களித்தார்கள்?

இந்த அரசு நீடிக்க, நீடிக்க புதுவை மக்களுக்கு துயரம் அதிகரிக்கத்தான் செய்யும். இந்த அரசு தொலைந்து போக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News