செய்திகள்

6-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-09-04 10:35 GMT   |   Update On 2017-09-04 10:35 GMT
வாகன ஓட்டிகள் வரும் 6-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதை உரிய அதிகாரிகள் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதி துரைசாமி விசாரித்தார். அப்போது நீதிபதி துரைசாமி, மழை மற்றும் இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது, இயற்கை சீற்றங்களின் போது ஆவணங்கள் சேதமடைந்தால் யார் பொறுப்பேற்பது? என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதைதொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், செப். 5-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமம் கேட்டு கட்டாயப்படுத்தப்படாது என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நீதிபதி துரைசாமி இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இயற்கை சீற்றங்களின் போது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. எனவே, வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 5-ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News