செய்திகள்

சக ஆசிரியர்கள், ஊழியர்கள் கிண்டல்: திருமணம் ஆகாததால் திருப்பூரில் ஆசிரியர் தற்கொலை

Published On 2017-09-01 12:34 GMT   |   Update On 2017-09-01 12:34 GMT
திருமணம் ஆகாத விரக்தியில் அரசு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு அண்ணா காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 33). இவர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை ஆசிரியர் தங்கவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர் தங்கவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது 33 வயது ஆகியும் இன்னும் திருமணமாகவில்லை என்று சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மனம் உடைந்த தங்கவேல் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது.

இது தொடர்பாக மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News