செய்திகள்

திருமணமான 4 மாதத்தில் மர்ம காய்ச்சலுக்கு புதுமாப்பிள்ளை பலி

Published On 2017-08-21 06:48 GMT   |   Update On 2017-08-21 06:49 GMT
பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25) ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கவிதா கர்ப்பமாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக ராஜேஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. அவரது உடல்நிலை மேலும் மோசமானது.

இதையடுத்து ராஜேசை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

காய்ச்சலுக்கு ராஜேஷ் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் பீதியில் அவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முரிச்சம் பேடு கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சுகாதாரத்துறையினர் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளனர்.

பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

இங்கு இதுவரை 47 பேர் காய்ச்சல் பாதிப்பால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது.

சின்னக்காவனம், மேட்டுப் பாளையம், அனுப்பம்பட்டு, மாதர்பாக்கம், பன்பிக்காவனூர் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு இருக்கிறது.

காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News