செய்திகள்

தமிழக மீனவர்கள் 49 பேரை விடுவிக்க நடவடிக்கை - பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

Published On 2017-08-08 23:41 GMT   |   Update On 2017-08-08 23:41 GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

நெடுந்தீவு பகுதியில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 49 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று ஒரே நாளில் சிறைபிடிக்கப்பட்டனர்.

மேலும், அவர்களின் 12 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வரும் 22-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நல்லெண்ண அடிப்படையில் 77 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
Tags:    

Similar News