செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரரின் மனைவி மகனுடன் மாயம்
ஆண்டிப்பட்டி அருகே மகனுடன் மாயமான ராணுவ வீரர் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராமலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்து விட்டு சென்றுள்ளார். இவரது மனைவி முருகலெட்சுமி (வயது 33). மகன் ஹரிபிரசாத் (8). மாமனார் வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக ஹரிபிரசாத்தை அழைத்துச் சென்ற முருகலெட்சுமி அதன் பின்பு மாயமானார். மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாமனார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
முருகலெட்சுமி ஏதாவது பிரச்சினையில் வீட்டை விட்டு சென்றாரா? அல்லது மகனுடன் யாரும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.