செய்திகள்

‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி: முதலமைச்சர் பழனிசாமி

Published On 2017-07-26 07:36 GMT   |   Update On 2017-07-26 07:36 GMT
‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்றார்.

அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பின்னர் அங்குள்ள மைய மண்டபத்தில் நடந்த புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார்.

அதன்பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று தருமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் அதை பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News