தஞ்சை அருகே கார் மோதி கேபிள் டி.வி. உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
ஒரத்தநாடு:
தஞ்சை அருளானந்த நகர் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45). இவர் கேபிள். டி.வி. நடத்தி வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் சென்று கேபிள் டி.வி.க்கான கட்டணம் வசூல் செய்துவிட்டு தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடிநீர் வாங்கி குடித்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் பாபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
ஒரத்தநாடு தென்னமநாடு, திருப்புவனத்தை சேர்ந்தவர் தனசீலன் (வயது 61). இவர் மினரல் வாட்டர் தயாரித்து வந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாடு சென்று புண்ணாக்கு வாங்கி கொண்டு திருப்புவனம் நோக்கி சென்றார். அவர் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த 2 விபத்துக்கள் குறித்தும் ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரத்தநாடு அருகே தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் அடுத்தடுத்து நடந்த 2 விபத்துக்களில் கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.