செய்திகள்

சோழவந்தான் அருகே விவசாயி மர்ம பலி: மகள் புகாரின் பேரில் போலீசார் விசாரணை

Published On 2017-07-25 10:28 GMT   |   Update On 2017-07-25 10:28 GMT
சோழவந்தான் அருகே விவசாயி பலியானதில் மர்மம் இருப்பதாக அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள தென்கரையைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52), விவசாயி. குடும்ப தகராறு காரணமாக சேகர் தனது மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி, மகள் மதுரையில் வசித்து வருகிறார்கள்.

சேகருக்கும், அவரது சகோதரர் அழகப்பன், சகோதரி விஜயா ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் சேகர் தென்கரையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரது உடலை எரிப்பதற்காக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

தந்தை சாவு குறித்து மதுரையில் வசிக்கும் மகள் சரண்யாவுக்கு (27) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சோழவந்தான் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது தந்தை இயற்கையாக மரணம் அடையவில்லை. தந்தையின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் சேர்ந்து சொத்துக்காக கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சேகரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News