பாபநாசம் அருகே கணவன்-மனைவியை தாக்கி நகை பறிப்பு
பாபநாசம்:
பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 50). இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே வந்தார். அவருடன் கருப்பையாவும் துணைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் கருப்பையனை தாக்கி பழனியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். அதனை தடுக்க முயன்ற பழனியம் மாளை தாக்கிவிட்டு வயல் வழியாக தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையனும், பழனியம்மாளும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை எழுப்பி கொள்ளையர்களை தேடினர். ஆனால் அவர்கள் யாரும் சிக்கவில்லை.
இந்த துணிகர நகைபறிப்பு குறித்து கருப்பையன் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் திருக்கருக்காவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.