செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 25 அடியை தாண்டியது

Published On 2017-07-17 12:04 GMT   |   Update On 2017-07-17 12:04 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 25.21 அடியாக உயர்ந்தது, இனி வரும் நாட்களில் கர்நாடகா மற்றும் கேராளாவில் பருவ மழை தீவிரம் அடைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சேலம்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன.

இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த 30-ந் தேதி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 7-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 3,500 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்திறப்பும் 500 கன அடியில் இருந்து அன்று முதல் 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து 2,566 கன அடியானது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 2,587 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 24.88 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 25.21 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் கர்நாடகா மற்றும் கேராளாவில் பருவ மழை தீவிரம் அடைந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் பருவ மழை தீவிரம் அடையுமா? நீர் வரத்து அதிகரிக்குமா, இந்தாண்டாவது சாகுபடியை பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News