சுசீந்திரம் அருகே திருமண மண்டபத்தில் குழந்தையிடம் செயின் பறிப்பு
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 33). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஹர்சிகா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று மகாலட்சுமி தனது குழந்தையுடன் ஆசிரமம் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள திருமண மண்டபத்திற்கு வந்திருந்தார். திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மகாலட்சுமி தனது குழந்தையுடன் உணவு சாப்பிடுவதற்காக சென்றார். பின்னர் திருமண நிகழ்ச்சி முடிந்தபின் வெளியே வந்து பார்த்தபோது மகள் கழுத்தில் கிடந்த செயின் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மண்டபம் முழுவதும் செயினை தேடி பார்த்தார். அங்கு உள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டனர். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி ஹர்சிகா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை மர்மநபர்கள் பறித்துச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் மதுசூதனன் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.