செய்திகள்

கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

Published On 2017-06-22 11:54 GMT   |   Update On 2017-06-22 11:54 GMT
கொடைக்கானல் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மன்னவனூர்:

கொடைக்கானல் அருகே புலியூர், பாறைப்பட்டி, அஞ்சுரான்மந்தை, பேத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 3000-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அதேபகுதியில் மாங்காய், மலைவாழை, பலாப்பழம் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சிறுத்தை வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தாக்கி கொன்றுவருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனை உறுதி செய்யவதைபோல் மரத்தின் மேல் சிறுத்தை உட்கார்ந்திருப்பதை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

பாறைப்பட்டி பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பாறைப்பட்டியை சேர்ந்த ராஜ்மோகன் கூறுகையில், ஏற்கனவே காட்டுயானைகள் மற்றும் பன்றிகளால் கடும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

தற்போது சிறுத்தை பீதியும் சேர்ந்துள்ளது. தோட்டத்தில் கட்டிபோட்டிருந்த நாயை நேற்றிரவு சிறுத்தை கடித்து இழுத்து சென்றது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வரவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை வனத்துறையினருக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உயரதிகாரிகள் இதில் தனிகவனம் செலுத்தி விவசாயிகளை வனவிலங்குகளிடம் இருந்து காக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News