திருமணம் பிடிக்காததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் குட்டியாண்டி. மீனவர். இவரது மகன் குணேஷ் (வயது 25). இவர் வாய் பேச முடியாத மாற்று திறனாளி ஆவார்.
மீன்பிடி தொழில் செய்து வந்த குணேசுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால், குணேசுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.
வாய் பேச முடியாத தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் திருமணத்தை தவிர்த்து வந்தார். ஆனால், குணேசுக்கு திருமணம் செய்து வைப்பதில் அவரது பெற்றோர் உறுதியாக இருந்தனர். இதனால் குணேஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, குணேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.