செய்திகள்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

Published On 2017-05-30 10:45 GMT   |   Update On 2017-05-30 10:45 GMT
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை:

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் மீதான உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


இந்த மனுவை ஐகோர்ட்டு கிளை பதிவாளர் வழக்கு விசாரணை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்ததுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News