ராஜபாளையத்தில் லாரி-ஆட்டோ மோதல்: 5 பேர் காயம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் கணபதியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிரபு அர்னால்டு (வயது46). இவரது நண்பர் குமார் (40). இவர்கள் மகாலிங்கம் என்பவரது ஆட்டோவில் புது பஸ் நிலையம் சென்றனர். இவர்களுடன் குமாரின் மகன்கள் நவநீதன் (17), முத்துக்குமார் (16) ஆகியோரும் ஆட்டோவில் சென்றனர்.
ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் கண் ஊரணி அருகே ஆட்டோ சென்றபோது முன்னால் சென்ற கம்பி பாரம் ஏற்றி சென்ற லாரி திடீரென நின்றது. இதனால் ஆட்டோ வேகமாக லாரியின் பின் புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் டிரைவர் மகாலிங்கம் மற்றும் பிரபு அர்னால்டு ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து லாரி டிரைவரான நல்லிமநாயக்கன்பட்டியை சேர்ந்த சுரேந்திரகுமார் (31) கைது செய்யப்பட்டார்.