உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68). கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பாண்டியன் மாயமானார். இது குறித்து அவரது மகள் ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஜோதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே வெள்ளையம்மாள்புரத்தை அடுத்த கருப்பணசாமி கோவில் மரிகாட் கண்மாய் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான பாண்டியனின் உடல் என தெரியவந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதால் யாராவது அடித்து கொன்று பிணத்தை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் பாண்டியனுக்கும் அவரது தோட்டத்தை சுற்றியுள்ளவர்களுக்கும் பொதுப்பாதை பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே அவர்களில் யாராவது பாண்டியனை கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.