செய்திகள்

டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Published On 2017-05-11 08:55 GMT   |   Update On 2017-05-11 08:55 GMT
டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த பலர், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்தின் ஆகியோர், ‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை குடியிருப்பு பகுதிகளுக்குள் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, ‘குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவினால், அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, தடையை நீக்கவேண்டும். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி வழக்கு தொடர உள்ளோம். அந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தாக்கல் செய்யுங்கள். பிற வழக்குடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.



மேலும், “கூடுதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்த கொள்கைகளை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் சில்லரை விற்பனை விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மக்களின உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் உயர்நீதிமன்றம் வரவேற்கும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News