செய்திகள்
செங்கத்தில் குடிநீர் கேட்டு மறியல்
செங்கத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கம்:
செங்கம் கோலாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர், இன்று காலை செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்ததும் விரைந்து வந்த செங்கம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.