வடமதுரை அருகே 1 குடம் தண்ணீரை 10 ரூபாய் விலைக்கு வாங்கும் மக்கள்
வடமதுரை:
தமிழகம் முழுவதும் பருவ மழை பொய்த்து போனதால் வறட்சி நீடித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதே நிலை தொடருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பகுதி மக்கள் வறட்சியின் காரணமாக தண்ணீர் தேடி காலி குடங்களுடன் தனியார் தோட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. அந்த கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வடமதுரை அருகே காணப்பாடி கிராமத்தில் தண்ணீர் கிடைப்பதே அரிதாகி வருகிறது. பள்ளி குழந்தைகள் முதற்கொண்டு லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு முண்டியடித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பொதுமக்களும் இதனை வேறு வழியின்றி வாங்கி வருகின்றனர்.
கிராம அதிகாரிகளிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.