செய்திகள்

திருபுவனை அருகே கல்லூரி சென்ற மாணவி மாயம்

Published On 2017-04-12 11:53 GMT   |   Update On 2017-04-12 11:54 GMT
திருபுவனை அருகே கல்லூரி சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

திருபுவனை:

திருபுவனை அருகே மத கடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் திருபுவனையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 19). இவர், வில்லியனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று ரம்யா கல்லூரியில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால், வெகு நேரம் ஆகியும் ரம்யா வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது, ரம்யா கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் ரம்யா இல்லை.

இதையடுத்து ரவி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

Similar News