செய்திகள்

சேகர் ரெட்டியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2017-03-28 09:39 GMT   |   Update On 2017-03-28 09:39 GMT
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சேகர் ரெட்டியைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.



ஜாமீனில் வெளியே வந்த சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் கடந்த வாரம் மீண்டும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் மார்ச் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து, சேகர் ரெட்டி தவிர மற்ற இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சேகர் ரெட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து, அவர்களின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News