செய்திகள்

குடும்ப தகராறு: தந்தையால் வி‌ஷம் கொடுக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

Published On 2017-02-02 10:19 GMT   |   Update On 2017-02-02 10:19 GMT
தூத்துக்குடி அருகே குடும்ப தகராறில் தந்தையால் வி‌ஷம் கொடுக்கப்பட்ட 3 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 40). இவர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி கன்னிசெல்வி. இவர்களுக்கு சவுந்தர்ய லெட்சுமி (12), வெண்ணிலா (8) என்ற 2 மகள்களும், வெங்கடேஷ் (4) என்ற மகனும் உள்ளனர். அப்பகுதியில் உள்ள பள்ளியில் சவுந்தர்ய லெட்சுமி 7-ம் வகுப்பும், வெண்ணிலா 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மாரிச்சாமி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கன்னிசெல்வி கணவரிடம் கோபித்து கொண்டு தூத்துக்குடி சத்யா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மாரிச்சாமி விரக்தி அடைந்தார்.

இதையடுத்து அவர் நேற்று காலை சாலையோரம் விற்பனை செய்யப்படும் கம்பங்கூழை வாங்கினார். பின்னர் அதில் வி‌ஷத்தை கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் குடிக்க கொடுத்தார். அதில் வி‌ஷம் கலந்திருப்பதை அறியாத 3 குழந்தைகளும் தந்தை கொடுத்தவுடன் அதை வாங்கி குடித்து விட்டனர்.

பின்னர் மாரிச்சாமி தானும் வி‌ஷம் கலந்த கம்பங்கூழை குடித்தார். சிறிது நேரத்தில் மாரிச்சாமியும், அவரது 3 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினர். தட்டு தடுமாறி எழுந்த மாரிச்சாமி பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினர்களிடம் சென்று 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கலந்த கம்பங்கூழை கொடுத்ததுடன் தானும் அதை குடித்ததை தெரிவித்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மாரிச்சாமியையும், 3 குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News