செய்திகள்

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2016-12-27 04:26 GMT   |   Update On 2016-12-27 04:26 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இன்று மேலும் ஒருவர் இறந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன். இவர் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கங்கை கரைக்கோட்டையில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இங்கு சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று அவர்கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்த போது பகல் 11.30 மணியளவில் திடீரென ஒரு அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கு வேலை பார்த்துக் கொண் டிருந்த சுப்புத்தாய் (வயது 40), சரசுவதி (44), செல்வி (25) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். மேலும் காயத்துடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்ட 5 பேரில் சூரிய நாராயண சாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தொடர்ந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மாமணிராஜ், செல்வராஜ், வீர லட்சுமி, முத்துமாரி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாமணிராஜ் (24) பரிதாபமாக இறந்தார்.

இதன்மூலம் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி ஆலை உரிமையாளர் ரமேஷ் கண்ணன், போர்மேன் ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தலை மறைவாகி விட்டதால், 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக நேற்று மாலை விபத்தை பார்வையிட வந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜனை, பலியானவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும். அதுவரை, உடல்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து,மக்கள் சமரசம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.

அதன்பின்னர் மாலை 4,15 மணிக்கு பின் பலியானோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அரசின் உதவித்தொகை விரைந்து கிடைத்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக பலியானவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தார்.

Similar News