திருவிடைமருதூர் அருகே கார் மோதி ம.தி.மு.க. பிரமுகர் பலி
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர், வண்ணக்குடி ஊராட்சி முன்னாள் தலைவராகவும், ம.தி.மு.க. ஊராட்சி செயலாளராகவும் பதவி வகித்தவர் சண்முகசுந்தரம் (வயது41). இவர் கட்டிட காண்டிராக்டராகவும் இருந்து வந்தார்.
நேற்று மாலை சண்முக சுந்தரம் கும்பகோணத்தில் நடைபெறும் கட்டிட பணிகளை பார்வையிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வண்ணக்குடி நோக்கி சென்றார். அவர் சீனிவாசநல்லூர் வழியாக சென்ற போது எஸ். புதூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சண்முகசுந்தரத்தை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.