செய்திகள்

கயத்தாறு அருகே அனுமதியின்றி தேவர் சிலை அமைப்பு: பதட்டம்-போலீஸ் குவிப்பு

Published On 2016-10-23 13:13 GMT   |   Update On 2016-10-23 13:13 GMT
கயத்தாறு அருகே அனுமதியின்றி தேவர் சிலையை யாரோ சிலர் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ளது வடக்கு இலந்தைகுளம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டால் ஆன தேவர் சிலையை ஊரின் நடுவே பொதுமக்கள் அமைத்தனர். ஆனால் அந்த சிலை அமைக்க அரசு அனுமதி பெறவில்லை. இதையடுத்து சிலை திறக்கப்படாமல் இதுவரை மூடியே இருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிமெண்ட் சிலையை அகற்றி விட்டு 6½ அடி உயரம் உள்ள வெண்கலத்தால் ஆன தேவர் சிலையை அங்கு யாரோ சிலர் வைத்துள்ளனர். இன்று காலை அந்த சிலைக்கு வடக்கு இலந்தைகுளம் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்தனர்.

அனுமதியின்றி சிலை திறக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி தாசில்தார் தங்கராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை உடனடியாக மூட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் புதிய சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்த பின்னர் மூடுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News