செய்திகள்

பாணாவரம் பகுதியில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2016-09-23 10:49 GMT   |   Update On 2016-09-23 10:49 GMT
பாணாவரம் பகுதியில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெமிலி:

பாணாவரம் அடுத்த மாலைமேடு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனித்தனியே 4 வீடுகள் உள்ளன. இதில் வசிப்பவர்கள் ஆண்கள் விவசாய கூலிவேலைக்கும் பெண்கள் நூறு நாள் வேலை திட்ட வேலைக்கும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை இங்கு வசிப்பவரில் ஒரு வீட்டை சேர்ந்த முனுசாமி (வயது 32) இவரது மனைவி மீனா (வயது23). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காலையில் வேலைக்கு சென்றுவிட்டனர். மீனா மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, கொலுசு மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதே போல் அருகில் உள்ள மேலும் 3 வீடுகளில் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் சிதறிக்கிடந்தன. அவர்களது வீட்டில் இருந்த முக்கிய ஆவனங்கள், 1 பவுன் நகை திருடப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.

இதுகுறித்து பாணாவரம் போலீசில் முனுசாமி புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2 வீட்டில் பொருட்கள் இல்லாததால் விரக்தியடைந்த கொள்ளையர்கள் அவர்கள் எடுத்து சென்ற ஆவணங்கள் முள்புதரில் வீசி சென்றுள்ளனர்.

இதனை கண்டெடுத்த அப்பகுதி மக்கள் ஆவனங்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Similar News