செய்திகள்

தர்மபுரி அருகே நள்ளிரவில் விபத்து: பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

Published On 2016-08-09 05:03 GMT   |   Update On 2016-08-09 05:03 GMT
பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த நரிப்பள்ளம் அருகே உள்ள மொண்டுகுழி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் குமரவேல் (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக காவல் துறையை சேர்ந்த 7-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், இவர் சொந்த வேலை காரணமாக 4 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். பின்னர், அவர் நேற்று மோட்டார் சைக்கிளில் போச்சம்பள்ளிக்கு சென்று விட்டு, நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பினார்.

அவர் பொய்யப்பட்டி பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக திருவண்ணாமலையில் இருந்து அரூரை நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அரூரை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் குமரவேல் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி, பலத்த காயம் அடைந்தார்.

தலை மற்றும் கால்களில் அவருக்கு பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்த நிலையில், குமரவேல் விபத்தில் சிக்கி இறந்தது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Similar News