செய்திகள்

வடமதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

Published On 2016-08-08 12:19 GMT   |   Update On 2016-08-08 12:19 GMT
வடமதுரை அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள புத்தூர் ஊராட்சியில் உள்ளது குருந்தம்பட்டி கிராமம். இங்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அதன்மூலம் தண்ணீர் கிடைக்கவில்லை.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பெறப்பட்ட தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். தற்போது வறட்சி காரணமாக கிணறுகளிலும் நீர் வற்றிவிட்டது. எனவே குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.

இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஊர் பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும் பெண்களும் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பபட்டது.

இன்று காலை அவ்வூருக்கு வந்த அரசு பஸ்கள் இதனை அறிந்து பாதியிலேயே திரும்பி சென்று விட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் யாரும் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே பிரச்சினைக்கு தீர்வு காண திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Similar News