செய்திகள்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: தொல்.திருமாவளவன்

Published On 2016-08-07 01:19 GMT   |   Update On 2016-08-07 01:19 GMT
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இளம்பெண் படுகொலை, சேலத்தில் ஒரு பெண் செய்துகொண்ட தற்கொலை, விழுப்புரத்தில் நடந்துள்ள கொடூரக் கொலை, தற்போது திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்த்தப்பட்ட படுகொலை, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சாலியமங்கலம் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள பயங்கரமான படுகொலை என ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கிராமம், நகரம் என எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை அதிகரித்து வருகிறது.

சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்கள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள் முதலானவர்களாலும், வக்கிரம் பிடித்த கொடூரர்களாலும் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் பெண்கள் நடத்தப்படும் நிலையைக்கொண்டே மதிப்பிடுவார்கள். தமிழகம் அனைத்துத் தளங்களிலும் முன்னேற வேண்டுமெனில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் உரிமையை மதிக்கும் மனோபாவத்தை நமது ஆண் பிள்ளைகளுக்கு பள்ளியிலிருந்தே உருவாக்கி வளர்க்க வேண்டும். அதற்கு உகந்த நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News