செய்திகள்

இந்த சுட்டிக்குட்டிக்கு இருக்கும் அறிவு நமக்கு இருந்திருந்தால்..? வீடியோ இணைப்பு

Published On 2018-08-13 05:53 GMT   |   Update On 2018-08-13 05:53 GMT
கட்டிலில் இருந்து கீழே இறங்கி விளையாட கால் உயரம் எட்டாத நிலையில், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தை செய்த அசாத்திய காரியத்தை கண்டு வியந்த பிரபல தொழிலதிபர் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பல நேரங்களில் அதிகமாக வதந்திகள் பரவினாலும், சில வேளைகளில் வியத்தகு சம்பவங்களும் பதிவிடப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ நமது பார்வையை தற்போது கவர்ந்துள்ளது.

யாரும் இல்லாத தனி அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் சுமார் ஒரு வயது குழந்தை கீழே இறங்கி விளையாட நினைக்கிறது. இதற்காக கட்டிலில் இருந்து காலை வெளியே நீட்டி இறங்க முயற்சிக்கையில், அந்த பிஞ்சு பாதம் தரையை தொட முடியாமல் தவிக்கிறது.



ஒரு காரியத்தை அடைய நமது உடல் அமைப்புகள் ஒத்து வராத போது அதற்கு ஏற்ப இட்டுக்கட்டி நினைத்ததை முடித்துக் கொள்ள பெரியவர்களாகிய நாம் சில நேரங்களில் சரியான முடிவெடுக்க தெரியாமல் திணறுவதுண்டு. ஆனால் இந்தச் சுட்டிக் குட்டியின் மூளை சில வினாடிகளில் மின்னல் வேகத்தில் செயலாற்றியது.

கட்டில் மற்றும் தரைக்கான இடைவெளியை குறைக்க அங்கிருந்த தலையணைகளை தனது பலம் கொண்டு மட்டும் இழுத்து கீழே போட்ட அந்த குழந்தை தனது விளையாட்டுத் தோழனான பொம்மையையும் சேகரித்துக் கொண்டு அடிப்படாமல் கட்டிலில் இருந்து தலையணையின் மேல் விழும் வீடியோ காட்சி தான் நம்மை கவர்ந்தது. இந்த வீடியோ நிச்சயம் உங்களையும் கவரும்.



ஏனெனில் இந்த வீடியோ கண்டு வியப்படைந்து போன மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்தால், அதற்கு எங்கள் நிறுவனத்தில் நிச்சயமாக நல்ல வேலை காத்திருக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போதே உறுதிமொழி அளித்துள்ளார்.

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


Tags:    

Similar News