செய்திகள்
மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் -பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி
திமுக மற்றும் காங்கிரசார் தமிழகத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை சித்தரித்துக்கொள்கிறார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
மதுரை:
மதுரையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:-
உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை. மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது.
தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்கா வர உள்ளது. நாடு முழுவதும் வைபை சேவை விரைவில் அளிக்கப்படும்.
மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான முறையில் கட்டப்படும். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என நினைத்தது பாஜக தான். காங்கிரஸ், திமுக அல்ல. திமுக மற்றும் காங்கிரசார் தமிழகத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை சித்தரித்துக்கொள்கிறார்கள். அது உண்மையல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.