செய்திகள்
சேப்பாக்கம் தொகுதி

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 10:53 GMT   |   Update On 2021-03-25 10:53 GMT
திமுக-வின் கோட்டையாக விளங்கும் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார்.
சேப்பாக்கம் என்றதுமே அரசியல் தலைவர்களில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரே நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை சேப்பாக்கம் தொகுதியில் அவர் வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

கருணாநிதியால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சேப்பாக்கம் தொகுதி, தற்போது அவரது பேரன் உதயநிதியால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.



கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் குதித்த உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தி.மு.க. தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. முதன் முறையாக அவர் தேர்தல் களம் காண்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. வேட்பாளராக கசாலி போட்டியிடுகிறார். சிறுபான்மையினத்தை சேர்ந்த இவர், ஓட்டுகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 75,000
2. அசையும் சொத்து- ரூ. 21,13,09,650
3. அசையாக சொத்து- ரூ. 6,54,39,552

பா.ம.க. வேட்பாளர் கசாலி சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 2,30,000
2. அசையும் சொத்து- ரூ. 4,95,750

சேப்பாக்கம் தொகுதியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், எழிலகம் அரசு கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம், பெரிய மசூதி ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன.

திருவல்லிக்கேணியில் உள்ள மீன் மார்க்கெட், சென்னையில் உள்ள பிரபலமான மீன் மார்க்கெட்டுகளில் ஒன்றாகும். இந்த மார்க்கெட்டை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இதுதவிர மீன், நண்டு, இறால் உள்ளிட்ட கடல் உணவுகளும் இந்த பகுதியில் குடோன்களில் சேமிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் அதிகம் நிறைந்த பகுதியாக சேப்பாக்கம் தொகுதி உள்ளது.

சிறுபான்மையினரும் அதிகளவில் வசித்து வருகிறார்கள். 2006-ம் ஆண்டு வரையில் சிறிய தொகுதியாக இருந்து வந்த சேப்பாக்கம் தொகுதி, 2011-ம் ஆண்டு முதல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி, சேப்பாக்கம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்த தொகுதியும் உள்ளது.

இதன் எல்லையோர தொகுதிகளாக துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி சேப்பாக்கம் தொகுதியில் 1,15,080 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 1,19,204 பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இந்த தொகுதி தொடர்ந்து தி.மு.க.வின் கோட்டையாகவே இன்று வரை இருந்து வருகிறது. 1991-ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் சார்பில் ஜீனத் சர்புதின் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.



இதனை தவிர்த்து 1977 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வே பெற்றி பெற்றுள்ளது. கடந்த 2 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. சார்பில் ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்த பிறகு அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.இடம் காலியாகவே இருந்து வருகிறது. 

எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு மையப்பகுதியாக இருக்கும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மழை காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது.

தொகுதியில் ஓடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி அதில் கழிவுநீர் கலக்காமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் என்பது சேப்பாக்கம் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. வருகிற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்று தொகுதி மக்கள் நம்புகிறார்கள்.

தேர்தல் வெற்றி

1977 ரகுமான்கான் (தி.மு.க.)
1980 ரகுமான்கான் (தி.மு.க.)
1984 ரகுமான்கான் (தி.மு.க.)
1989 அப்துல் லத்தீப் (தி.மு.க.)
1991 ஜீனத் சர்புதீன் (காங்கிரஸ்)
1996 கருணாநிதி (தி.மு.க.)
2001 கருணாநிதி (தி.மு.க.)
2006 கருணாநிதி (தி.மு.க.)
2011 ஜெ.அன்பழகன் (தி.மு.க.)
2016 ஜெ.அன்பழகன் (தி.மு.க.)
Tags:    

Similar News