செய்திகள்
10 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தும் திமுக திருந்தவில்லை -எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
கூட்டணி விஷயத்தில் பாஜக, காங்கிரஸ் என கூடுவிட்டு கூடு பாய்வதாக திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பெரம்பலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் 2-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அரியலூர் சென்றார்.
அங்கு அவர் பேசுகையில், “வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. விவசாயப் பணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறேன். தற்போது நீங்கள் தந்த பதவி முதல்வர். மக்களவைத் தேர்தலில் பல பொய்களை கூறினார் ஸ்டாலின். தற்போது மக்கள் விவரமாக உள்ளனர்” என்றார்.
பின்னர், பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொண்டபோது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கூட்டணி விஷயத்தில் பாஜக, காங்கிரஸ் என கூடுவிட்டு கூடு பாய்கிறது திமுக. 10 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தும் திமுக திருந்தவில்லை. ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார். ஆனால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.
பாஜகவுக்கு அதிமுக அடிமையாக இல்லை. திட்டங்களை கொண்டு வர இணக்கமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.