செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி திருவிழா தேரோட்டம்
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில், சிவனாரின் பஞ்ச சபைகளில் தாமிரசபை திருத்தலம் ஆகும். மகா விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த இடமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி தேர் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
கோவிலில் இந்த ஆண்டு ஆனி தேர் திருவிழா, கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பாராயணம், தீபாராதனை நடந்தது. கடந்த 2-ந்தேதி காலையில் உருகு சட்டசேவையை தொடர்ந்து அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி தரிசனமும், மாலையில் பச்சை சாத்தி தரிசனமும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இன்று (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1.30 மணிக்கு நடன தீபாராதனையும், மாலை 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் நடைபெறும். தொடர்ந்து அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.