பெரியபட்டினம் சந்தனக்கூடு, கந்தூரி விழா
- 16-ந்தேதி இரவு முதல் 17-ந்தேதி பகல் வரை சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெற உள்ளது.
- தர்கா பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிர்ந்தது.
பெரியபட்டினம் மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் 121-வது மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஜலால் ஜமால் பள்ளிவாசல் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை, தப்பட்டை முழங்க, வாணவேடிக்கைகள் மற்றும் நாட்டிய குதிரைகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சந்தனக்கூடு தர்காவை வலம் வந்த பின்னர் உலக அமைதிக்காக துவா ஓதப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்ற நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான அனைத்து சமுதாயத்தினர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி தர்கா பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிர்ந்தது. திருவிழா கடைகள், பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
வருகிற 16-ந்தேதி இரவு முதல் 17-ந்தேதி பகல் வரை சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை தர்கா கமிட்டி மற்றும் சுல்தானியா சங்கத்தினர் செய்திருந்தனர்.