வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர மாலை சமர்ப்பணம்

Published On 2022-08-10 05:45 GMT   |   Update On 2022-08-10 05:45 GMT
  • யாகசாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
  • மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று புனித பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலையில் யாகசாலையில் ஹோமம் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஸ்ரீவாரி மூலவர், உற்சவமூர்த்திகள், கோவில் பரிவார தெய்வங்கள், கொடிமரம், பூவராஹசுவாமி, பேடி ஆஞ்சநேயசுவாமி ஆகியோருக்கு வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க பவித்ரமாலை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பேத்த ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News