வழிபாடு

ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவில், தாமிரபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

Published On 2022-07-28 04:47 GMT   |   Update On 2022-07-28 04:47 GMT
  • ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
  • தாமிபரணி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

காரையாறு, சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைப்பு செய்தனர்.

தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின்னர் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசுவாமி, ஊசிமாடசுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன.

பாபநாசம் படித்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். வழக்கமாக சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் திரண்டனர்.

இதே போல் ஆடி அமாவாசை தினமான இன்று தாமிபரணி நதிக்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

பாபநாசம் பாபநாச நாதர் கோவில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை, குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தாமிரபரணி படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்தனர்.

இதற்காக தாமிபரணி ஆற்றில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் தாமிபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தாமிபரணி படித்துறை ஓரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ஏராளமானோர்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபடுவார்கள்.

அதன்படி இன்று பல்லாயிரகணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே அணிஅணியாக திரண்டு வந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர்.

அதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.கா.அ.கருத்தப்பாண்டி நாடார் செய்திருந்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் இன்று வழிபாடு செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கியம்மன் படித்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தாமிபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கோவில்கள், நீர்நிலைகளில் பல்லாயிரகணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Tags:    

Similar News