ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு: சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு

Published On 2018-01-20 08:31 GMT   |   Update On 2018-01-20 08:31 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் முடிவடைந்ததை அடுத்து இன்று கோவில் நடை மூடிப்பட்டது.
கேரளாவின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை கடந்த 14-ந்தேதியும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானம் வந்தனர். சரண கோ‌ஷம் முழங்க ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பினர்.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் வரை நெய் அபிஷேகம் நடந்தது. நேற்று மாளிகை புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை சடங்குகள் நடந்தது.

இதில், பந்தள ராஜ குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மாலையில் பிரசித்திப் பெற்ற படி பூஜை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது.

இன்று காலை பந்தளம் ராஜ குடும்பத்தினருக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ராஜ குடும்ப பிரதிநிதி ராஜராஜ வர்மா கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தார்.

ராஜ குடும்பத்தினர் தரிசனம் செய்து முடித்ததும் அவரிடம் சபரிமலை கோவில் சாவியை ஒப்பைடக்க வேண்டும். அதன்படி, சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டு ஊழியர்கள் கோவில் சாவியை ராஜ குடும்ப பிரதிநிதி ராஜராஜ வர்மாவிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது. பிரகாரங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

இனி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். 
Tags:    

Similar News