ஆன்மிகம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-12-27 06:04 GMT   |   Update On 2017-12-27 06:04 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 7-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா வருகிற 7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

10-ம் திருநாளான வருகிற 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தை அமாவாசை திருவிழா நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.

11-ம் திருநாளான 17-ந் தேதி(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.

12-ம் திருநாளான 18-ந் தேதி(வியாழக்கிழமை) தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம் மங்கள தரிசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
Tags:    

Similar News