ஆன்மிகம்
பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
திருநள்ளாருக்கு அடுத்து இந்த கோவிலில் சனி பகவான் தனியாக எழுந்தருளி இருப்பதால் இந்த கோவில் பொழிசை வட திருநள்ளாறு என அழைக்கப்படுகிறது.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று இந்த கோவிலில் சனி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை நடைபெற்றது.
அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. அதனை தொடர்ந்து, சனி தோஷ நிவர்த்தி பரிகார ஹோமமும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு சனி பகவானை தரிசனம் செய்தனர்.
இதே போல் வில்லிவாக்கத்தை அடுத்து உள்ள பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.