ஆன்மிகம்
ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2017-11-20 05:50 GMT   |   Update On 2017-11-20 05:51 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை மாத அமாவாசையான நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து உற்சவ அம்மனுக்கு ராஜமாதங்கி அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டார். பின்னர் இரவு 11.20 மணி அளவில் உற்சவ அம்மன் வடக்கு வாயில் வழியாக பம்பை மேளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். இரவு 12.20 மணி அளவில் பூசாரிகள் பக்தி பாடல்களை பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகாதீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. இதில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News