ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

Published On 2017-11-13 07:39 GMT   |   Update On 2017-11-13 07:39 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உபநாச்சியார்களுடன் நம்பெருமாள் நேற்று நெல்லளவு கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை(செவ்வாய்க்கிழமை) வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாள் முதல் 6-ம் நாளான நேற்று முன்தினம் வரை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்தடைந்தார்.

இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளிய பின் ஊஞ்சல் ஆடிக்கொண்டே மங்களாரத்தி கண்டருளினார். அர்ச்சகர் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே வெற்றிலை தாம்பூலத்தை அடிக்கடி நம்பெருமாள் முன்பு காட்டி எடுத்தார்.

ஊஞ்சல் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். ஊஞ்சல் மண்டபம் வந்த பின் இரவு 8.15 மணிக்கு தொடங்கி இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிறைவு நாளான நாளை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். ஊஞ்சல் உற்சவத்தையொட்டி பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது.
Tags:    

Similar News