ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடைதிறப்பு

Published On 2017-09-12 05:00 GMT   |   Update On 2017-09-12 05:00 GMT
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

17-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

17-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

21-ந் தேதியன்று அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

புரட்டாசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News