ஆன்மிகம்
அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிப்பட்டம் அவதாரபதியை சுற்றி வலம் வந்தபோது எடுத்தபடம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றம்

Published On 2017-07-22 04:20 GMT   |   Update On 2017-07-22 04:20 GMT
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதரித்த தலமான திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு 185-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடிமரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. அதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.

தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, மாலையில் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, மதியம் இரவில் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். தினமும் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, மாலையில் திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.05 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
Tags:    

Similar News