ஆன்மிகம்

400 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்: ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்

Published On 2017-07-14 05:56 GMT   |   Update On 2017-07-14 05:56 GMT
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக ரூ.5¾ கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி சுசீந்திரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

108 வைணவ தலங்களில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலும் ஒன்றாகும். 8-ம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமையான கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் கோதையாறும், பரளியாறும் வட்டமிடுவதால் திருவட்டார் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பரப்பளவு 3.23 ஏக்கர் ஆகும். மூலவர் ஆதிகேசவப்பெருமாள் 22 அடி நீளத்தில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 410 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தமிழக அரசு திருக்கோவில் நிதி, அரசு நிதி மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.5¾ கோடி செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளது.



அதன் அடிப்படையில் மூலஸ்தானம், கருவறை மண்டபம், ஒற்றைக்கல் மண்டபம், தேக்குமரப் பணிகள் பழுது பார்த்து செப்புத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிரகார மண்டபத்தில் கல்தளம் அமைத்தல், கோவில் சுற்றுப்பிரகார கதகளி மண்டபம் ஓட்டுக்கூரை பழுதுபார்த்தல், அன்னதான மண்டபம் பழுதுபார்த்தல், திருவம்பாடி கிருஷ்ணசுவாமி சன்னதி திருப்பணி, வெளிப்பிரகார கல்தூண், அலங்கார தூண்கள் சுத்தம் செய்தல், பலிக்கல் மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல், உள் சுற்றுப்பிரகார மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல், கிழக்கு முகப்பு கோபுர திருப்பணி போன்ற வேலைகள் முடிந்துள்ளது.

புதிய கொடிமரம் புதுப்பிக்கும் பணி, கோவில் நமஸ்கார மண்டபம் மற்றும் சுற்று மண்டபம் தேக்கு மரப்பணிகள் பழுது பார்த்து செப்பனிடுதல், நம்பிமடம், காஞ்சிமடம் பழுதுபார்த்தல், வெளிச்சுற்றுப்பிரகார மண்டபம், பிரகார கட்டிடங்கள், மதிற்சுவர்கள் பழமை மாறாமல் புதுப்பித்தல், ஒற்றைக்கல் மண்டபம் மர வேலைப்பாடுகள் சுத்தம் செய்து பாதுகாப்பு பூச்சு பூசுதல் மற்றும் மூலிகை ஓவியங்கள் புனரமைக்கும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News