ஆன்மிகம்

தாராவியில் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-06-27 04:13 GMT   |   Update On 2017-06-27 04:13 GMT
தாராவியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மும்பை தாராவி டிரான்சிட் கேம்ப் பிளாக் எண் 12-ல் புதிதாக ஆனந்த விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பாலமுருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

முன்னதாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அன்று கோவிலில் மங்கள இசை, திருமுறைபாராயணம், விக்னேஷ்வர பூஜை, கணபதி, நவக்கிரக, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தன. நேற்று முன்தினம் மூன்றாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவையும் நடந்தன.

கும்பாபிஷேக தினமான நேற்று காலை புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் விமான கோபுரங்கள் மற்றும் ஆனந்த விநாயகர் மூலஸ்தானத்திற்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் ஜெகதீஷ், தாராவி தாலுகா சிவசேனா துணை தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், பட்டத் தேவர், தொழில் அதிபர்கள் சுந்தரேசன் நாடார், கங்காதரன் நாடார், குமரேசன், முருகன் நாடார், செந்தில் ஆசாரி, பொன்வேல் மற்றும் தமிழ் பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜெகதீசன் நாடார், தங்கசாமி, கிருஷ்ணராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News