ஆன்மிகம்
திண்டுக்கல்லில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2017-03-01 05:53 GMT   |   Update On 2017-03-01 05:53 GMT
திண்டுக்கல்லில், ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலின் மாசித்திருவிழா வருடந்தோறும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல் உள்பட பல்வேறு முக்கிய உற்சவ நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த வருட மாசித்திருவிழா கடந்த 23-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அடுத்தநாள் பூச்சொரிதல் விழா, சாமி சாட்டுதல் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.

இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு திருமாங்கல்யம், மஞ்சள் புடவை சாத்துபடி செய்தல் நடந்தது. இதையொட்டி சங்க தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் திருமாங்கல்யம், மஞ்சள்புடவை ரதவீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலை அடைந்தது. அதேபோல் சாம்பான்குல மகாசபையினர் பாலக்கொம்பை ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு திருமாங்கல்யம், மஞ்சள்புடவை சாத்துபடி செய்யப்பட்டு பாலக்கொம்பு ஊன்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருக்கோவில் சார்பில் பகல் 12 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. விஸ்வகர்ம மகாஜன சபா பொருளாளர் குமரேசன் சகோதரர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. அதனைதொடர்ந்து மாலையில் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை, அம்மனின் அழகிய மின்தேர் வீதிஉலா நடந்தது. இரவு கோவில் கலையரங்கில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், விஸ்வகர்ம மகாசபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News