சினிமா

சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டு அமர்களப்படுத்திய ‘மெர்சல்' இசை வெளியீடு

Published On 2017-08-20 17:36 GMT   |   Update On 2017-08-20 17:36 GMT
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சென்னை :

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.



விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. விழா தொடங்கும் நேரத்திற்கு முன்னரே அலை கடலென ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன் ஆகியோரும் பங்கேற்றனர். விழா அரங்கின் வாயிலில் நடிகர் விஜய் அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.



விழா நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், எஸ்.ஜே சூர்யா, தனுஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் திரை வரலாற்றில் முதன்முறையாக படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி முழுவதையும் சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்தது. மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் சமூக வலைதளங்களிலும் விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Tags:    

Similar News